சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.54 திருவொற்றியூர்
பண் - தக்கேசி
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
    அதுவும் நான்படப் பாலதொன் றானாற்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
    பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
    மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
1
கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய்
    காதற் சங்கிலி காரண மாக
எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி
    என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
    பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
2
கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
    கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
    அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
    வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
3
ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
    லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
    சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
    கொள்வ தேகணக் குவழக் காகில்
ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
4
வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
    உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச்
    சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்
கழித்த லைப்பட்ட நாயது போல
    ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீயரு ளாயின செய்யாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
5
மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
    வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
    சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
    உயிரொ டும்நர கத்தழுந் தாமை
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
6
மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்
    எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
    பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
    கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
7
கூடினாய் மலை மங்கையை நினையாய்
    கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
சூடி னாயென்று சொல்லிய புக்கால்
    தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனனே
    வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
8
மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்
    மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
    அழையேற் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
    முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
    ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
9
ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
    ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற
    நான்ம றையங்கம் ஓதிய நாவன்
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
    சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
    பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.
10
(*) இது உன்னைப் பிரிந்து போவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்குச் சூளுரை செய்து மணந்து மகிழ்ந்திருக்கையில் திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானை தரிசனம் செய்யாமல் நெடுநாள் பிரிந்திருக்கின்ற ஞாபகம் உண்டாகப் சிவபெருமானின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையை மறந்து திருவொற்றியூர் எல்லையைக் கடந்தபோது கண் பார்வை போக, வருந்தித் துதிசெய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.91 திருவொற்றியூர்
பண் - குறிஞ்சி
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
1
பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.
2
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.
3
என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
புன்னை மலரும் புறவிற் றிகழுந்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி யூரே.
4
பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.
5
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடையார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே.
6
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி யூரே.
7
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.
8
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
9
ஒற்றி யூரும் அரவும் பிறையும்
பற்றி யூரும் பவளச் சடையான்
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com